விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி; இன்ஸ்., டாக்டர்களிடம் சிபிஐ விசாரணை: பிரேத பரிசோதனை குறித்து கேள்வி
கரூர்: கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. நேற்று க.பரமத்தி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தங்கராஜ் காலை 10.30 மணிக்கு சிபிஐ அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் பகல் 12 மணி வரை விசாரணை நடத்தினர். இவரை தொடர்ந்து, காலை 11 மணிக்கு நாமக்கல், ஈரோடை சேர்ந்த 5 அரசு டாக்டர்கள் 2 கார்களில் சிபிஐ அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அவர்களிடம் பகல் 2 மணி வரை விசாரணை நடந்தது.
அப்போது, காயமடைந்தவர்களுக்கு வழங்கிய மருத்துவ சிகிச்சை, முதலுதவி நடவடிக்கைகள், எத்தனை பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தீர்கள். பிரேத பரிசோதனை அறிக்கை (ரிப்போர்ட்) யாரிடம் எந்த தேதியில் வழங்கினீர்கள். இறந்தவர்கள் கூட்டத்தில் மிதிப்பட்டு இறந்தார்களா? மூச்சு திணறி எத்தனை பேர் இறந்தனர். அதிர்ச்சியில் எத்தனை பேர் இறந்தனர் போன்ற கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது. அவர்கள் அளித்த பதில்களை வாக்குமூலமாக சிபிஐ பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, கரூர் மாவட்ட வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்க நிர்வாகிகள் 5 பேரிடமும் தனித்தனியாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.