விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை, அவரை கைது செய்ய வேண்டும் என நாங்கள் வலியுறுத்தவில்லை : திருமாவளவன்
சென்னை : விஜயை கையில் எடுக்க பாஜக பகீரத முயற்சிகளை மேற்கொள்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை, அவரை கைது செய்ய வேண்டும் எனவும் நாங்கள் வலியுறுத்தவில்லை. நடந்த சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தான் விமர்சனம் செய்து வருகிறோம். பாஜக, அதன் கூட்டணி கட்சிகள்தான் இதில் அரசியல் செய்கின்றன. விஜயை கையில் எடுக்க பாஜக பகீரத முயற்சிகளை மேற்கொள்கிறது.
சதிகார, சூழ்ச்சிகார அரசியல் சக்திகளிடம் சிக்கினால் அவர் இதுபோன்ற பல நெருக்கடிகளை சந்திக்க நேரும்; விஜய் சுதந்திரமாக சிந்தித்து செயல்பட வேண்டுமென்பது தான் என் வேண்டுகோள். தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் இந்த விவகாரத்தில் திருப்தி அளிக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்திருப்பதை வரவேற்கிறோம். கரூர் துயரம் தொடர்பாக அஸ்ரா கார்க் தலைமையில் புலனாய்வு குழு அமைத்திருப்பதையும் வரவேற்கிறோம். உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறோம்." இவ்வாறு தெரிவித்தார்.