3 நாளுக்கு பின் வீடியோ விடும் விஜய் எப்படி தலைவராக முடியும்? மார்க்சிஸ்ட் கம்யூ. அகில இந்திய பொதுச்செயலாளர் கண்டனம்
கரூர்: கரூர் துயர சம்பவம் தொடர்பாக 3 நாட்களுக்கு பின் வீடியோ வெளியிடும் விஜய் தலைவராக முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்ஏ பேபி தெரிவித்தார். கரூரில் கடந்த 27ம் (சனிக்கிழமை) தேதி இரவு தவெக பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தையொட்டி கூட்ட நெரிசலில் சிக்கிய உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்ஏ பேபி, கேரளாவை சேர்ந்த எம்பிக்கள் ராதாகிருஷ்ணன், சிவதாசன், திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தன், கட்சியின் தலைமை குழு உறுப்பினர் வாசுகி ஆகியோர் கரூரில் சம்பவம் நடைபெற்ற இடத்தை ஆய்வு மேற்கொண்டனர். நாகை எம்எல்ஏ நாகை மாலி, மாநில குழு உறுப்பினர் பாலா ஆகியோருடன் நேற்று காலை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர் எம்ஏ பேபி அளித்த பேட்டி: தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக அரசின் நடவடிக்கைகள் பாராட்டுக்குறியது. மு.க.ஸ்டாலின் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்ததால் நிறையபேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். நள்ளிரவிலேயே முதல்வர் இங்கு வந்து மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளித்துள்ளார். இதனை பாராட்டுகிறோம். விஜய் வருகை தாமதமானதால் 7 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர், உணவுகள் வழங்கப்படாததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இது போன்ற நிகழ்வுகள் இனி நடந்திட கூடாது. இதனை பார்த்த பிறகாவது மக்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் தொண்டர்களை கட்டுப்படுத்த வேண்டும். தவறு யார் செய்து இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பின் வீடியோ வெளியிடும் விஜய் எப்படி கட்சி தலைவராக முடியும். தமிழ்நாடு அரசு இந்த விசயத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அரசு உயிரிழந்தவர்களுக்கு வீடு கொடுக்க வேண்டும். பணம் கொடுத்தால் மட்டும் போதாது. இவ்வாறு அவர் கூறினார்.