திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் தலைநகரங்களில் வெங்கடேசபெருமாள் கோயில்: முதல்வர் சந்திரபாபுநாயுடு வலியுறுத்தல்
திருமலை: நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் வெங்கடேசபெருமாள் கோயில் கட்ட தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பங்கேற்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை சுவாமிக்கு சமர்ப்பித்து சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் பேசியதாவது: மறைந்த என்.டி.ராமாராவ் தொடங்கிய அன்னப்பிரசாத திட்டம் பல மடங்கு விரிவடைந்து ரூ.2,283 கோடியை அன்னப்பிரசாத அறக்கட்டளைக்கு பக்தர்கள் வழங்கி உள்ளனர். மாதந்தோறும் ரூ.12 கோடி செலவாகும் நிலையில் வட்டியின் மூலம் ரூ.14 கோடி வருவாய் கிடைக்கிறது. இதனால் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
வாணி அறக்கட்டளைக்கு இதுவரை ரூ.2,038 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. அதில் ரூ.837 கோடி கோயில் கட்டுமானத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. ரூ.200 கோடிக்கும் அதிகமான தொகை வட்டியாகவும் வந்துள்ளது. விரைவில் மாநிலம் முழுவதும் ஐந்தாயிரம் கோயில்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் தலைநகரங்களிலும், பல்வேறு நாடுகளில் இந்து மக்கள் இருக்கும் பகுதிகளிலும் வெங்கடேசபெருமாள் கோயில்களை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாரி சேவா தன்னார்வலர்களின் சேவைகள் பாராட்டுக்குரியது. இந்த சேவையில் 17 லட்சம் தன்னார்வலர்கள் சிறந்த சேவைகளை வழங்கி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.