சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98 கோடி முறைகேடு வழக்கில் மாஜி அமைச்சர் வேலுமணி சேர்ப்பு: லஞ்ச ஒழிப்புத்துறை ஐகோர்ட்டில் தகவல்
சென்னை: முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில், 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்நிலையில், வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, ஆதாரங்களை சேகரித்தால் அவருக்கு எதிராக மீண்டும் வழக்கு தொடரலாம் என்று தெரிவித்திருந்தது.
இந்த பின்னணியில், ஒப்பந்த முறைகேடு தொடர்பாக, அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்களுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று புகார்தாரரான அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணை வந்தது.
லஞ்ச ஒழிப்புத்துறையின் கூடுதல் மனுவில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் சேகரித்துள்ளதால், அவர் மீது வழக்கு தொடர சபாநாயகர் அப்பாவு கடந்த 2024 பிப்ரவரி 12ம் தேதி அனுமதி அளித்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகளான கே.எஸ்.கந்தசாமி மற்றும் கே.விஜய கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர ஒன்றிய அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையை வரும் 12ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.