டிச.17ல் வன்னியர் உள் இடஒதுக்கீட்டு போராட்டம்: அன்புமணி அறிவிப்பு
சென்னை: டிசம்பர் 17ம் தேதி வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுப் போராட்டம் நடைபெறு உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : நமக்கே உரித்தான கற்களும், முட்களும் நிறைந்த சமூகநீதியை நோக்கிய இன்னொரு போராட்டப் பாதையில் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு குறைந்தது 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் டிசம்பர் 17ம் தேதி தமிழகம் முழுவதும் நாம் நடத்தவிருக்கும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டத்தைப் பற்றி தான் நான் குறிப்பிடுகிறேன்.
தமிழ்நாட்டின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சிறை நிரப்புவதற்காக நாம் நடத்தவிருக்கும் போராட்டம் பத்தோடு பதினொன்றாக இருக்கக் கூடாது. நமது வலிகளையும், வலிமையையும் வெளிப்படுத்தும் வகையில் வெற்றிகரமாக அமைய வேண்டும்.
பாட்டாளிகளை அடைக்க தமிழ்நாட்டின் சிறைகள் போதாது என்று அஞ்சும் அளவுக்கும், வன்னியர்களுக்கான சமூகநீதியை இனியும் தாமதிக்கக் கூடாது என்று நினைத்து உடனடியாக வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றும் அளவுக்கும் டிசம்பர் 17ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் அமைய வேண்டும். அதற்கேற்ற வகையில் போராட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். போராட்டக் களத்தில் உங்களுடன் கைக்கோர்த்து போராடுவதற்கான நாளை எண்ணி, எண்ணி காத்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.