தொடர் விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரி: தொடர் விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்ைத கண்டு ரசித்தனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார விடுமுறை என 3 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று கன்னியாகுமரிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அதேபோல் இன்றும் 2வது நாளாக அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர். பின்னர் அவர்கள் சூரிய உதயத்தை பார்க்க திரிவேணி சங்கமத்தில் திரண்டனர். தொடர்ந்து கடலில் உதித்த சூரியனை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் அவற்றை தங்களது செல்போன்களில் படம் பிடித்து கொண்டனர்.
இதையடுத்து திடீரென கன்னியாகுமரியில் லேசான மழை பெய்தது. ஆனாலும் சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தவாறு கடலில் குளித்தனர். பின்னர் அவர்கள் பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காந்தி, காமராஜர் மண்டபங்கள், காட்சி கோபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுற்றிபார்த்தனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் படகு மூலம் கடலில் செல்ல பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலகம் நோக்கி விரைந்தனர்.
இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் கூட்டம் அதிகரித்தது. நீண்ட வரிசையில் நின்ற சுற்றுலா பயணிகள் காலை 8 மணிக்கு படகு சேவை தொடங்கியதும் படகில் சென்று விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்துக்கு சென்று சுற்றிபார்த்தனர். கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் அங்குள்ள பல்வேறு கடைகளில் விற்பனை களைகட்டியது.