உத்தரகாண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு: கடும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு எண்ணிக்கை 18ஆக உயர்வு!
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் வெள்ளப் பெருக்கால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த மழையால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. திங்கட்கிழமை காலை முதலே கனமழை பெய்து வந்த நிலையில், இரவில் டேராடூனில் மேகவெடிப்பால் வானத்தில் இருந்து அருவி போல் மழை கொட்டியது. இதன் காரணமாக தம்சா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆற்றங்கரையோரத்தில் உள்ள தப்கேஷ்வர் மகாதேவ் கோயிலைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. இதே போன்று, நிலச்சரிவால் வீடுகள் மற்றும் சாலைகளும் பலத்த சேதமடைந்தன.
டேராடூனில் நேற்று அதிகாலை ஒரு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதில் 5 பேர் பலியாகினர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு படை நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், டேராடூன் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
டேராடூன் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டு நிலவரத்தை ஆய்வு செய்தார். உத்தரகாண்டில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்து, மாநிலத்துக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர்.