உ.பி.யில் 10 நாட்களில் 20 என்கவுன்ட்டர்: ‘ஆபரேஷன் லங்கடா’ நடவடிக்கையில் 10 பேர் உயிரிழப்பு!!
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் கடந்த 10 நாட்களில் நடைபெற்ற 20 என்கவுன்ட்டர்களில் 10 முக்கிய குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் குற்றச் செயல்களை தடுப்பதற்காக ‘ஆபரேஷன் லங்கடா’ எனும் பெயரில் முக்கிய குற்றவாளிகளை பிடிக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 10 நாட்களில் நடைபெற்ற 20 என்கவுன்ட்டர்களில் 10 முக்கிய குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர் பட்டியலில் ரூ.2.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட வினீத் பாட்டி, ரூ.1 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட இப்தகார், இம்ரான், அர்ஷத், நயீம் ஆகியோரும் உள்ளனர். பாலியல் வன்கொடுமை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட பலரை அம்மாநில போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்துள்ளனர். கடந்த 8 ஆண்டுகளில் உ.பி. காவல்துறை 14,973 என்கவுன்ட்டர்களை நடத்தியுள்ளது. இதில் 239 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உ.பி.யின் கவுசாம்பி மாவட்டத்தில் 3 நாட்களுக்கு முன் புதுமணப் பெண் ஒருவர் கழுத்து அறுத்து
கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தில் 48 மணி நேரத்தில் அவரது காதலன் பால்வீர் காலில் சுடப்பட்டு கைது செய்யப்பட்டார்.ராபர்ட்ஸ்கஞ்ச் மாவட்டத்தில் கடந்த 8-ம் தேதி ஒரு பெண்ணிடம் கொள்ளையடித்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மறுநாள் இந்த மூவரும் என்கவுன்ட்டரில் கைது செய்யப்பட்டனர். பரேலியில் ரூ.1 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட காஸ்கஞ்சின் இப்தகார், கடந்த 8-ம் தேதி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். இவரது மரணம் குற்றவாளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.