அமெரிக்கா விதித்த இந்தியா மீதான 50% வரி அடுத்த வாரம் அமல்: டிரம்ப்பின் வர்த்தக ஆலோசகர் உறுதி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதித்தார். மேலும் உக்ரைன் போரில் தடை செய்யப்பட்ட ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக கூடுதலாக 25 சதவீதம் என இந்தியா மீது மொத்தம் 50 சதவீதம் கூடுதல் வரி விதித்தார். இதையடுத்து ரஷ்ய அதிபர் புடின் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று டிரம்ப்பை சந்தித்து பேசினார். அதன் பிறகு இந்தியா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் மீண்டும் அடுத்த வாரம் 50 சதவீத வரி விதிப்பு அமலாகும் என்று டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில்,’ 2022 பிப்ரவரியில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு முன்பு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கவில்லை. இந்தியா அப்போது தனது தேவையில் கிட்டத்தட்ட ஒரு சதவீதம் மட்டும் ரஷ்யாவிலிருந்து வாங்கியது. ஆனால், அது இப்போது 35 சதவீதமாக உயர்ந்துள்ளது. அவர்களுக்கு எண்ணெய் தேவையில்லை. இது ஒரு லாபப் பகிர்வுத் திட்டம். இது ரஷ்யாவுக்கு பணத்தை மாற்றும் ஒரு சலவைத் தொழிற்சாலை போல செயல்படுகிறது என்பதுதான் உண்மை.
மோடி ஒரு சிறந்த தலைவர். இந்த விஷயத்திலும், உலகப் பொருளாதாரத்திலும் உங்கள் பங்கு என்ன என்பதைப் பாருங்கள். இப்போது நீங்கள் செய்வது அமைதியை உருவாக்கும் வேலை இல்லை. இது போரை நிலைநிறுத்தும் வேலை மாதிரிதான். இந்தியாவுடனான எங்கள் வர்த்தகத்தால் அமெரிக்கர்களுக்கு என்ன லாபம் இருக்கிறது. இந்தியா வரியில் மகாராஜ். இது அமெரிக்க தொழிலாளர்களையும், அமெரிக்க வணிகத்தையும் பாதிக்கிறது. அவர்கள் எங்களிடமிருந்து பெறும் பணத்தை, ரஷ்ய எண்ணெய்யை வாங்கப் பயன்படுத்துகிறார்கள். ரஷ்யர்கள் இந்தப் பணத்தை ஆயுதங்களை உருவாக்கவும், உக்ரைனியர்களைக் கொல்லவும் பயன்படுத்துகிறார்கள்’ என்றார்.