4 வாரங்களில் சீன அதிபரை நேரில் சந்தித்து பேசுவேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீனா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விரும்புவதால், நமது நாட்டின் சோயாபீன்ஸ்சை வாங்காததால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில், வரி விதிப்பு மூலம் நாம் நிறைய பணத்தை சம்பாதித்துள்ளோம். அந்த பணத்தின் ஒரு சிறிய பகுதிகளை எடுத்து நமது விவசாயிகளுக்கு உதவ போகிறோம்.
நான் ஒருபோதும் நமது விவசாயிகளுக்கு பாதிப்பு உருவாக சம்மதிக்க மாட்டேன். அதிபராக இருந்தபோது தூக்கத்தில் இருந்த ஜோ பைடன் சீனாவுடன் எந்த ஒப்பந்தத்தையும் ஏற்படுத்தவில்லை. நான் நமது தேசபக்தர்களையும், விவசாயிகளையும் நேசிக்கிறேன். நான் 4 வாரங்களில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பேன். அவருடன் பேசும்போது சோயாபீன்ஸ் ஒரு முக்கிய விவாத பொருளாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: சீன அதிபர் ஜி ஜின்பிங்வுடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. அவர் டிக்டாக் செயலி தொடர்பான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தார். என்னால் சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க முடிந்தது. இது எங்களுக்கு மிகவும் நல்ல ஒப்பந்தமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர் ஒரு ஜென்டில்மேன். எங்களுக்கு அவர்களுடன் ஒரு நல்ல உறவு உள்ளது’ என்றார்.