UPI மூலம் பொருட்கள், சேவைகள் பெறுவதற்கான தினசரி பரிவர்த்தனைக்கான வரம்பு ரூ.10 லட்சமாக உயர்வு
மும்பை : யுபிஐ மூலம் பொருட்கள் மற்றும் சேவைகள் பெறுவதற்கான தினசரி பரிவர்த்தனை வரம்பு 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே, BHIM என பல்வேறு செயலிகளின் மூலம் இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. நாளுக்கு நாள் இதன் பயனர்கள் மற்றும் பண பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. இந்நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பை, NPCI என்பிசிஐ எனப்படும் இந்திய தேசிய கட்டண கழகம் மாற்றி அமைத்துள்ளது. அவை பின்வருமாறு..
*பங்குச்சந்தை முதலீடு, காப்பீட்டு பிரிமீயம், கடன் மற்றும் கடன் தவணை, அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை போன்ற நிறுவனங்களுக்கான பரிவர்த்தனை யு.பி.ஐ. மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை அனுப்பலாம் என இருந்ததை ரூ.10 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
*கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட கடன் நிலுவை தொகையை செலுத்துவதற்கான வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாகவும், நகை வாங்குவதற்கு செலுத்தப்படும் தொகையை பொறுத்தமட்டில் ரூ.1 லட்சமாக இருந்த பரிவர்த்தனை வரம்பு ரூ.6 லட்சமாகவும் உயர்கிறது.
*தனிநபர் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொருவரின் கணக்கிற்கு அனுப்பும் பண பரிவர்த்தனை ஏற்கனவே அமலில் இருப்பது போன்று ரூ.1 லட்சமாகவே தொடர்கிறது.
*கல்வி கட்டணம், மருத்துவ கட்டணம், ஐ.பி.ஓ. (முதல் பங்கு வெளியீடு) போன்றவற்றுக்கான பரிவர்த்தனையும் ஏற்கனவே இருப்பது போன்று ரூ.5 லட்சமாக தொடர்கிறது.