ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி உள்பட 11 பேருக்கு இரட்டை வாக்கு: போலீசில் காங்கிரஸ் புகார்
திருவனந்தபுரம்: ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, தம்பி மற்றும் உறவினர்கள் 11 பேருக்கு இரட்டை வாக்குகள் இருப்பதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி காங்கிரஸ் சார்பில் திருச்சூர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த போலீஸ் தீர்மானித்துள்ளது. கடந்த வருடம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்ட சுரேஷ் கோபி 74 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தொடர்ந்து இவர் சுற்றுலா, பெட்ரோலியத் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் சுரேஷ் கோபி மீது காங்கிரஸ் சார்பில் நேற்று திருச்சூர் போலீஸ் கமிஷனர் இளங்கோவிடம் ஒரு புகார் அளிக்கப்பட்டது. திருச்சூர் முன்னாள் எம்பியும், காங்கிரஸ் தலைவருமான டி.என். பிரதாபன் அளித்துள்ள இந்த புகாரில் கூறியிருப்பது: சுரேஷ் கோபி தன்னுடைய குடும்பத்துடன் திருவனந்தபுரம் சாஸ்தமங்கலத்தில் வசித்து வருகிறார். இவருக்கு இங்கு தான் ஓட்டு உள்ளது. ஆனால் கடந்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு சற்று முன்னதாக சுரேஷ் கோபி, மற்றும் அவருடைய தம்பி குடும்பத்தினர் 11 பேர் திருச்சூரில் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டனர். ரேஷ் கோபியின் தம்பி சுபாஷ் கோபிக்கு கொல்லத்தில் ஓட்டு உள்ளது. ஆனால் அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்களும் திருச்சூரில் சேர்க்கப்பட்டுள்ளது. கிரிமினல் குற்றம் செய்த ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
* திருச்சூர் தொகுதியில் 1.46 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு
கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட கடந்த ஆண்டு கேரளாவில் மொத்தம் 16,02,172 வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டனர். இதில் சுரேஷ் கோபி வெற்றி பெற்ற திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதியில் தான் மிக அதிகமாக 1,46,673 வாக்காளர்கள் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக வடகரையில் 1.35 லட்சம், கோழிக்கோட்டில் 1.14 லட்சம், பொன்னானியில் 1.14 லட்சம், மலப்புரத்தில் 1.10 லட்சம் வாக்காளர்களும் கூடுதலாக சேர்க்கப்பட்டனர்.