ஒன்றிய அரசு தினக்கூலி தொழிலாளர்களை ஊக்குவிக்காமல் அரசு துறைகளில் நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்: தமிழ்நாடு ஐஎன்டியுசி செயற்குழுவில் தீர்மானம்
சென்னை: இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தமிழ்நாடு கிளையின்(ஐஎன்டியுசி) புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல் செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஐஎன்.டி.யு.சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு தலைவர் மு.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் நிர்வாகிகள் கோவை செல்வம், வாழப்பாடி இராம.கர்ணன், துறைமுகம் முனுசாமி, கோபிநாத் பன்னீர்செல்வம், ஆலந்தூர் நாகராஜ், ஜி.ஜெயபால், எம்.ராஜேஸ்வரி, வழக்கறிஞர் ஜி.சரவணன், செயற்குழு உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு ஐஎன்டியுசிக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயக முறைபடி சென்னை உயர்நீதி மன்றம் டிவிஷன் பெஞ்ச் அமர்வின் உத்தரபடி நிர்வாகிகள் தேர்தல் நடத்தி கொடுத்தவர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. 3 பேர் கொண்ட நிர்வாக குழுவை நியமித்து, அவர்களின் வழிகாட்டுதலின்படி புதிய மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்படுவார்கள். தேர்தல் இல்லாத காலத்தில் தீவிரமாக வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வது வழக்கமாக நடத்தப்படும் பயிற்சியாக இருந்தாலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை என்.ஆர்சி. செயல்படுத்துவதற்கான மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுடன் எஸ்ஐஆர் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது.
90 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால், இந்த புதிய வாக்காளர்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. இது ஜனநாயகத்தின் படுகொலைக்கு சமம், மேலும் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிறது. எஸ்ஐஆர்ஐ. இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. அரசு போக்குவரத்து தொழிற்சங்களுடன் நிர்வாகமும் உடனே பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். பென்ஷன் தொகையை மாதத்தின் முதல் நாளே வழங்க வேண்டும். ஒன்றிய அரசு தினக்கூலி கான்ட்ராக்ட் தொழிலாளர்கள் என்பதை ஊக்குவிக்காமல் அரசு துறைகளில் நிரந்தர பணியாளர்களாக பணியமர்த்த வேண்டும். மற்றும் தொழிலாளர்களுக்கு பாதுபாப்பு அளித்து உறுதிசெய்ய வேண்டும். வாரியத்தில் பதிவு செய்துள்ள ஓய்வு பெற்ற அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்சம் மாதம் ஐந்தாயிரம் உதவித்தொகை வழங்கவேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.