இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் போர்; ஒன்றிய அமைச்சர் அமெரிக்கா பயணம்: பேச்சுவார்த்தை மீண்டும் தொடக்கம்
புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததற்கு பதிலடியாக, இந்தியப் பொருட்கள் மீது 50 சதவீதம் வரை அமெரிக்கா அபராத வரி விதித்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டதுடன், இந்திய ஏற்றுமதியாளர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதன் காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையும் ஒத்திவைக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உள்ளது. சமீபத்தில் புதுடெல்லியில் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் குழு நடத்திய பேச்சுவார்த்தை சாதகமாக அமைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசியில் உரையாடினர்.
இந்த முன்னேற்றங்களின் அடிப்படையில், ஒன்றிய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அடுத்த வாரம் வாஷிங்டன் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின்போது, வரி விதிப்பு மற்றும் சந்தை அனுமதி போன்ற முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தின் இடையே, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோவைச் சந்தித்துப் பேசவிருப்பது, இந்தப் பேச்சுவார்த்தைக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.