ஐ.நா சபையில் எனக்கு எதிராக 3 முறை நாசவேலை: டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு அவமானம் நடந்தது. ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று முறை நாசவேலை நடந்தது. முதலாவதாக உரையாற்ற மாடிக்கு செல்லும் எஸ்கலேட்டர் செயலிழந்தது. நானும், மெலனியாவும் கைப்பிடியை இறுக்கமாக பிடித்து கொண்டோம். இல்லையென்றால் பேரழிவாக இருந்திருக்கும். இது முற்றிலும் நாசவேலை.
எஸ்கலேட்டரை அணைத்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும். பின்னர், உலகம் முழுவதும் லைவில் கோடிக்கணக்கான மக்கள் மற்றும் அரங்கில் முக்கியமான தலைவர்கள் இருந்த கூட்டத்தின்முன் நான் நின்றபோது, எனது டெலிப்ராம்ப்டர் வேலை செய்யவில்லை. 3வதாக, உரையை நிகழ்த்திய பிறகு, அந்த ஆடிட்டோரியத்தில் ஸ்பீக்கர் வேலை செய்யவில்லை. இது தற்செயல் நிகழ்வு அல்ல. இது நாசவேலை.
அவர்கள், தங்களை பற்றி வெட்கப்பட வேண்டும். இந்த கடிதத்தின் நகலை நான் ஐநா பொதுச்செயலாளருக்கு அனுப்புகிறேன். உடனடியாக விசாரணையை கோருகிறேன். ஐக்கிய நாடுகள் சபையால் வேலையை செய்ய முடியவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. எஸ்கலேட்டரில் உள்ள அவசர நிறுத்த பொத்தானை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும். இதுகுறித்து ரகசிய போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.