வளர்ச்சியை நிலைநாட்டுவதில் இந்திய ஒன்றியத்துக்கே நம் முதலமைச்சர் வழிகாட்டுகிறார் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை : வளர்ச்சியை நிலைநாட்டுவதில் இந்திய ஒன்றியத்துக்கே நம் முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுகிறார் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் தொலைநோக்குத் திட்டங்களால், 2024-2025-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19 சதவீதத்தை எட்டியிருக்கிறது.
இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியைப் பெற்றுள்ள ஒரே மாநிலமாக தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 2006-2011 ஆட்சிக் காலத்தில் எட்டப்பட்ட இந்த இரட்டை இலக்க வளர்ச்சி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு நம் முதலமைச்சர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் மீண்டும் சாத்தியமாகி இருக்கிறது.
எல்லோருக்குமான திட்டங்களின் வழியே வளர்ச்சியின் கரங்கள் அனைத்துத் தரப்பையும் அரவணைப்பதால், முழுமையாக ஜனநாயகப்படுத்தப்பட்ட ஒரு பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது. இதே வேகத்தில் நடைபோட்டால் நிச்சயம் இன்னும் 5 ஆண்டுகளில் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் நம் முதலமைச்சர் அவர்களின் கனவு நனவாகும் என்று பொருளாதார வல்லுநர்கள் சொல்வது உத்வேகம் அளிக்கிறது.மாநில உரிமைகளை மீட்பதில் மட்டுமின்றி வளர்ச்சியை நிலைநாட்டுவதிலும் இந்திய ஒன்றியத்துக்கே நம் முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுகிறார்கள். தமிழ்நாடு வளரும்! தமிழ்நாடு வெல்லும் !!"என்று கூறப்பட்டுள்ளது.