த.வெ.க கொடியை பயன்படுத்த தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தர்ம பரிபாலன சபை மேல்முறையீடு: விஜய் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: த.வெ.க. கொடிக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய கோரிய மேல்முறையீட்டு மனுவிற்கு தவெக தலைவர் விஜய் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்கள் வணிகச் சின்னமாக பதிவு செய்யப்பட்டுள்ள சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறத்திலான கொடியை பயன்படுத்த தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிற கொடியை பயன்படுத்த த.வெ.க.வுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவன தலைவர் பச்சையப்பன் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், எம்.சுதீர்குமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்குமாறு தவெக தலைவர் விஜய்க்கு உத்தரவிட்டனர்.