கூட்டணியில் மீண்டும் இணைய டிடிவியிடம் வலியுறுத்தினேன்; ஓ.பி.எஸ்.ஸை விரைவில் சந்திப்பேன்: அண்ணாமலை பரபரப்பு பேட்டி
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை விரைவில் சந்திப்பேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் வீட்டுக்கு நேற்றுமுன்தினம் இரவு நேரில் சென்ற அண்ணாமலை, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். டிடிவி தினகரனுடனான சந்திப்பு குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை; அரசியல் நிலவரம் குறித்து டிடிவி தினகரனிடம் பேசினேன். தமிழகத்தின் அரசியல் களம் எப்படி இருக்கிறது என்பது குறித்து இருவரும் பேசினோம். மீண்டும் கூட்டணியில் இணைய வலியுறுத்தினேன்.
அரசியலில் நிரந்தர எதிரி இல்லை. கோரிக்கையை ஏற்பதும் ஏற்காததும் தினகரனின் விருப்பம். டிடிவி தினகரனுடன் பாஜக தொடர்ந்து நட்புறவில்தான் இருக்கிறது. அரசியல் தேர்தல் களம் சூடுபிடிக்கும்போது சிறிய மனஸ்தாபங்கள் மாறும் என நம்புகிறேன். இன்னும் காலம் இருக்கிறது; காத்திருப்போம்; அரசியலில் கூட்டணி என்பது மாறும். டிடிவி தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் 2024-ல் எங்களை நம்பி பாஜக கூட்டணிக்கு வந்தவர்கள். அவர்களை காயப்படுத்தும் வகையில் பொதுவெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தையும் விரைவில் சந்திப்பேன்.
நடிகர் ரஜினிகாந்தை மாதத்துக்கு ஒருமுறை சந்தித்து பேசுவது வழக்கம். நடிகர் ரஜினிகாந்தை அடிக்கடி சந்திப்பேன்; அண்மையில் பார்த்தேன். நான் ரஜினி காந்தை ஒரு குருவாக பார்க்கிறேன்; அவர் ஆன்மீகம் பற்றி பேசுவார்; ஆத்மார்த்தமான நட்பு இருக்கக்கூடிய மனிதர் ரஜினி. எனவே அதை அரசியலோடு முடிச்சு போட்டு பேச வேண்டாம் என்று கூறினார்.