போதைப்பொருள் கடத்தல் மன்னனான வெனிசுலா அதிபரை பிடித்தால் 50 மில்லியன் டாலர் பரிசு: டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு
நியூயார்க்: போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்ய உதவும் தகவல்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையை 50 மில்லியன் டாலராக டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் மீது, கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் முறையாக அதிபராக இருந்தபோது, போதைப்பொருள் தீவிரவாதம் மற்றும் கொக்கைன் கடத்தல் சதித்திட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அவரைக் கைது செய்ய உதவுவோருக்கு 15 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.
அதன்பின்னர், ஜோ பைடன் நிர்வாகம் அந்தத் தொகையை 25 மில்லியன் டாலராக உயர்த்தியது. இந்தத் தொகை, சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனைப் பிடிக்க அமெரிக்கா அறிவித்த பரிசுத்தொகைக்கு நிகரானதாகும். இவ்வளவு பெரிய பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டபோதிலும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி மதுரோ தனது பதவியில் நீடித்து வருகிறார். இந்நிலையில், வெனிசுலா அதிபர் மதுரோ, உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராகச் செயல்படுவதாகவும், போதைப்பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருளை சப்ளை செய்வதாகவும் குற்றம் சாட்டி, அவரைக் கைது செய்வதற்கான பரிசுத்தொகையை 50 மில்லியன் டாலராக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மதுரோவுடன் தொடர்புடைய 700 மில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட 7 மில்லியன் டன் கொக்கைனுக்கும் அவருக்கும் நேரடித் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி அறிவிப்பு குறித்து மதுரோ தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.