இந்தியாவை மிரட்டும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு காவடி தூக்கும் மோடி: கே.பாலகிருஷ்ணன் தாக்கு
தர்மபுரி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தர்மபுரியில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையில் மிகப்பெரிய தோல்வியை மோடி அரசு சந்தித்துள்ளது. அமெரிக்க அதிபருக்கு காவடி தூக்குகிற வேலையை மோடி செய்கிறார். காசாவில் அப்பாவி மக்களை இஸ்ரேல் கொன்று குவிக்கிறது. இதனை மோடி கண்டிக்கவில்லை. ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வந்த போது, இந்தியா நடுநிலை வகித்தது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு, அமெரிக்கா 25 சதவீதம் வரி விதிக்கிறது. இதை எதிர்த்து மோடி அரசு குரல் கொடுக்கவில்லை. இந்தியா குறைந்த விலையில், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி அமெரிக்கா எதிர்க்கிறது. அமெரிக்காவின் அடிமையாக இந்தியா இருக்க வேண்டும் என டிரம்ப் மிரட்டுகிறார்.
ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பம் போடவில்லை என்றால், மோசமான விளைவை சந்திக்க நேரிடும் என டிரம்ப் மிரட்டுகிறார். இந்திய தேர்தல் ஆணையம், பாஜவின் மகளிர் அணி, இளைஞர் அணி போல், தேர்தல் அணியாக மாறி விட்டது. பீகார் மாநிலத்தில் 69 லட்சம் வாக்காளர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இறந்து விட்டதாக விளக்கம் தருகின்றனர். இதே போல் தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களிலும் வாக்காளர்களை நீக்குவதாக சொல்கின்றனர். தங்களுக்கு வேண்டாத சிறுபான்மை மக்கள், இஸ்லாமிய மக்களின் வாக்குரிமையை பறிக்கும் அராஜக செயலில் பாஜ அரசு இறங்கியுள்ளது. உச்சநீதிமன்றம் சொல்லியும் தேர்தல் ஆணையம் கேட்க மறுக்கிறது. இதனை எதிர்த்து, இந்தியா கூட்டணி 8ம் தேதி போராட்டம் நடத்த அறைகூவல் விடுத்துள்ளது.
தேர்தல் ஆணையத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 12ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம். அரசு துறைகளில் தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றி வருபவர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழகத்தில் பாஜ கூட்டணி நாளுக்கு நாள் சின்னாபின்னமாகி பலவீனமாகி வருகிறது. ஏற்கனவே பன்னீர்செல்வம் பாஜ கூட்டணியில் இல்லை என்று அறிவித்து விட்டார். இந்த சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி நாங்கள் ஆட்சியை பிடிப்போம் என்று கற்பனை கண்டு வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி சிதைந்து சின்னாபின்னமாவது தமிழ்நாட்டிற்கு நல்லது. இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார். இந்திய தேர்தல் ஆணையம், பாஜவின் மகளிர் அணி, இளைஞர் அணி போல், தேர்தல் அணியாக மாறி விட்டது.