திருச்சி அருகே பாதாள சாக்கடையை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு!
திருச்சி: திருவெறும்பூர் அருகே கார்மல் கார்டன் பகுதியில் பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கார்மல் கார்டன் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் ரவி(30), பிரபு (32) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது தொழிலாளர்கள் இருவரையும் விஷவாயு தாக்கியது.
இதன் காரணமாக இருவரும் மயங்கி விழுந்தனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் பாதாள சாக்கடை அடைப்பை அகற்றும்போது மூச்சுத் திணறி இருவர் உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.