திருச்சி அருகே சாலை விபத்தில் இறந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: திருச்சி லால்குடியில் சாலை விபத்தில் இறந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடியிலிருந்து திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த TN48 AB8168 என்ற பதிவெண் கொண்ட சிற்றுந்து இன்று காலை 09.30 மணி அளவில் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி தடம்புரண்ட விபத்தில், இலால்குடி, நன்னிமங்கலத்தைச் சேர்ந்த அரவிந்த், இலால்குடி முஸ்லிம் தெருவைச் சேர்ந்த சாதிக்பாட்சா, இலால்குடியைச் சேர்ந்த விஸ்வநாதன்ஆகிய மூன்று நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும் இவ்விபத்தில் பலத்த காயமடைந்த இலால்குடியைச் சேர்ந்த நபில், இலால்குடியைச் சேர்ந்த அப்துல் ரகுமான், இலால்குடி மேலவாளாடியைச் சேர்ந்த கார்த்திகேயன், இலால்குடியைச் சேர்ந்த ஏகலைவன், நன்னிமங்கலத்தைச் சேர்ந்த ஆனந்த், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, வடகரையைச் சேர்ந்த கணபதி மற்றும் இலால்குடியைச் சேர்ந்த முஸ்தபா ஆகிய 7 பேர் மற்றும் இலேசான காயமடைந்த இலால்குடியைச் சேர்ந்த குகன், இலால்குடியைச் சேர்ந்த திலீப், இலால்குடியைச் சேர்ந்த ஆஷிக் ஆகிய மூவரும் திருச்சிராப்பள்ளி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்கு தனி மருத்துவக் குழுவினரால் சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.