திருச்சி தனியார் கல்லூரியில் மாணவியை கட்டிப்பிடித்து முத்தம்: பேராசிரியர் போக்சோவில் கைது
திருவெறும்பூர்: திருச்சியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், முதலாமாண்டு படித்து வரும் 17 வயது மாணவி ஒருவர், மணிகண்டம் காவல் நிலையத்தில் அதே கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது: கல்லூரியில் இசிஇ துறை பேராசிரியராக கே.கே.நகரை சேர்ந்த தமிழ்(52) என்பவர் பணியாற்றி வருகிறார்.
கடந்த 13ம்தேதி ஆய்வகத்தில் மாணவிகளுடன் நான் இருந்தபோது பேராசிரியர் என்னை கையால் சைகை காட்டி அவரது அறைக்கு அழைத்தார். அங்கு சென்றபோது, பேராசிரியர் செல்போன் இல்லையா, நான் வாங்கி தருகிறேன் எனக்கூறி திடீரென என்னை கட்டிப்பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான், அவரது பிடியிலிருந்து விலகி அவரை தள்ளி விட்டேன். தொடர்ந்து அவர், உன் இன்னர் சைஸ் என்ன என்று கேட்டு மீண்டும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். உடனே அவரை தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி வந்தேன்.
இதுதொடர்பாக உதவி முதல்வர் மற்றும் வகுப்பு பேராசிரியரிடம் புகார் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. எனவே என்னிடம் தவறாக நடக்க முயற்சித்த பேராசிரியர், வகுப்பு பேராசிரியர், உதவி முதல்வர் ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த பாலியல் புகார் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இதுதொடர்பாக மகளிர் போலீசார் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சிசிடிவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் பேராசிரியர், மாணவியை அழைத்து பேசுவது பதிவாகியிருந்தது. இதுகுறித்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து பேராசிரியர் தமிழை நேற்று கைது செய்தனர்.