திருச்சி அருகே ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்க முயன்றதால் பரபரப்பு!
திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. எடப்பாடி வருகைக்காக துறையூரில் காத்திருந்த அதிமுகவினர், அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸுை தடுத்து நிறுத்தி கதவை திறந்து ஓட்டுநரை தாக்க அதிமுகவினர் பாய்ந்ததால் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனத்தையும் அதிமுகவினர் சேதப்படுத்தியதால் துறையூரில் உச்சகட்ட பதற்றம் நிலவியது.
திருச்சி மாவட்டம் துரையூர் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரப் பொதுக்கூட்டம் நடத்த இருந்த நிலையில் அங்கு அதிமுகவினர் பெருமளவில் சாலையோரம் காத்திருந்தனர். அவ்வழியே ஆத்தூர் சாலையில் விபத்தில் சிக்கியவரை மீட்க ஆம்புலன்ஸ் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது கூட்டத்தில் இருந்த சில அதிமுகவினர் சாலையை மறித்து ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஓட்டுனரை தாக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆம்புலன்ஸ் செல்ல வழிவகை செய்ததன் மூலம் விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதிமுகவினர் ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் கடந்த 18ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அங்குள்ள எம்ஜிஆர் சிலை அருகே இரவு 10.18 மணிக்கு பேச தொடங்கியபோது அவ்வழியாக ஆம்புலன்ஸ் வந்தது.
உடனே ஆம்புலன்சை நிறுத்திய எடப்பாடி பழனிசாமி, அதில் நோயாளிகள் உள்ளார்களா? என பார்க்கும்படி கட்சியினரிடம் கூறினார். மேலும், நோயாளி இல்லாத ஆம்புலன்ஸை திட்டமிட்டே அனுப்புகிறீர்கள் எனக்கூறியதுடன், அடுத்த முறை ஆளில்லாத ஆம்புலன்ஸ் கூட்டத்திற்கு இடையூறாக வந்தால், ஆம்புலன்சை ஓட்டி செல்பவர் அதில் பேஷண்டாக செல்வார் என டிரைவரை நேரடியாகவே மிரட்டினார்.
போலீஸ் விசாரணையில், அந்த ஆம்புலன்ஸ் பள்ளிகொண்டா ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளியை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மறுநாள் ஆம்புலன்ஸ் டிரைவர் விளக்கம் அளித்திருந்தார். இதற்கிடையே ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேந்தர் அணைக்கட்டு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் அடையாளம் தெரியாத 5 நபர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.