சென்னையில் கனமழை; கோடம்பாக்கம், மயிலாப்பூரில் மரங்கள் சாய்ந்தன: 17 தாழ்வான பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரம்
சென்னை: சென்னையில் கனமழை காரணமாக கோடம்பாக்கம், மயிலாப்பூரில் மரங்கள் சாய்ந்தன. வடகிழக்கு பருவமழை எதிரொலியாக, தமிழக அரசு சார்பில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது .நேற்று இரவு முதல் சென்னை முழுவதும் விடிய விடிய விட்டுவிட்டு மழை பெய்தது . இந்த மழையின் காரணமாக, சென்னை கோடம்பாக்கம் மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தன .கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் ஐந்தாவது குறுக்குத் தெருவில் ஒரு பழமையான மரம் மின் கம்பியில் விழுந்தது . அதேபோல, 24 மணி நேரமும் போக்குவரத்து மிகுந்த பகுதியான மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையிலும் ஒரு மரம் சாய்ந்தது.
இந்த இரண்டு சம்பவங்களிலும் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. சம்பவ இடங்களுக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக அந்த மரங்களை அறுத்து அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். தற்போது, சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி பணியாளர்கள், காவல் துறையினர், அதேபோல மின்வாரியத்தினர் இணைந்து தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . குறிப்பாக, சாலை ஓரங்களில் உள்ள மின் இணைப்புப் பெட்டிகளில் மின்கசிவு ஏற்பட்டு விபத்துகள் நிகழாமல் இருக்க மின்வாரிய பணியாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மேலும், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 17 தாழ்வான இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன .
இந்த இடங்களில் தீயணைப்புத் துறையினர் ரப்பர் படகுகள் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். தீயணைப்பு துறை இணை இயக்குனர் சத்தியநாராயணா மேற்பார்வையில், மேலும் தாழ்வான இடங்கள் எந்தெந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெறுகிறது .