ரயிலில் தனிப்பட்ட அறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ரயில்வே துறை வருவாயை ஆண்டுக்கு ரூ.2600 கோடி வரை உயர்த்த இலக்கு
மாதவரம்: இந்திய ரயில்வேயின் ரயில் பெட்டி தயாரிப்பு ஆலைகளின் தாய் வீடான சென்னை ஐ.சி.எப், தனது உற்பத்தியில் லேசர் வெல்டிங் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி, பயணிகள் சேவையில் தனிப்பட்ட அறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ரயில்வே வருவாயை ஆண்டுக்கு ரூ.2600 கோடி வரை உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் டெக்னிக்கல் சூப்பர்வைசர்ஸ் அசோசியேஷன் சார்பில் சென்னையில் 60வது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. இதில் ஐ.சி.எப் பொது மேலாளர் சுப்பாராவ் மற்றும் ரயில்வே நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், ஐசிஎப்பில் என்னென்ன மேம்பாடுகள் செய்ய வேண்டும் என்று கருத்தரங்கு நடைபெற்றது. இதில் ஐசிஎப் மேம்படுத்துதல் மற்றும் வருமானம் அதிகரித்தல் என்ற தலைப்பில் இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் மேற்பார்வையாளர்கள் ரமேஷ் சமர்ப்பித்த முக்கிய விளக்கக்காட்சியில் இடம்பெற்றன. அதில், தற்போதுள்ள ரயில் பெட்டி தயாரிப்பு முறைகளில் உள்ள காலதாமதம் மற்றும் அதிக எடை போன்ற சவால்களை சமாளிக்க, ஐ.ஆர்.டி.எஸ்.ஏ. பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த பரிந்துரைத்துள்ளது. அனைத்து ரயில் பெட்டிகளுக்கும் நெளிவுடைய பக்க சுவர்களை பயன்படுத்துவதன் மூலம், ஒரு கோச்சின் எடையை குறைந்தபட்சம் 500 கிலோ வரை குறைக்க முடியும்.
இதனால், 22 பெட்டிகள் கொண்ட ஒரு ரயில் அமைப்புக்கு 11 டன் எடை குறைப்பு சாத்தியமாகும். இது எரிசக்திச் சேமிப்புக்கு வழிவகுப்பதோடு, ஒரு கோச்சிற்கு ரூ1,00,000 வரை ஸ்டீல் செலவை குறைக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உற்பத்தி வேகத்தை அதிகரிப்பதற்காகவும், பெட்டிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் லேசர் வெல்டிங் நுட்பத்தை ஐ.சி.எப்-இல் அறிமுகப்படுத்த வேண்டும். இது வெல்டிங்கில் ஏற்படும் வெப்ப பாதிப்பையும் சிதைவையும் குறைக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில்வேவின் கீழ் வகுப்பு பயண பெட்டிகள் மற்றும் ஸ்லீப்பர் வகுப்புகளில் சிலவற்றை, சிறிய தனிப்பட்ட அறைகளாக மாற்றியமைக்க வலியுறுத்தினார்.
2 அடுக்கு மற்றும் 3 அடுக்கு ஏ.சி. படுக்கைகளில் 25 சதவீதம், 2ம் வகுப்பு மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் படுக்கைகளில் 10 சதவீதம். இவ்வாறு மாற்றப்படுவதன் மூலம், ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூபாய் 2600 கோடி வரை கூடுதல் வருவாய் ஈட்ட முடியும் என்று ஐ.ஆர்.டி.எஸ்.ஏ. மதிப்பிட்டுள்ளது. இது பயணிகளுக்கு அதிக தனியுரிமை கொண்ட பயண அனுபவத்தை வழங்கவும் உதவும். போன்ற காட்சிகள் இடம்பெற்றன. இந்தக் கருத்தரங்கம், இந்திய ரயில்வேயின் வருங்கால வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கான ஒரு புதிய பாதையை வகுத்துள்ளது.