வேலூர் அருகே இன்று நடந்த பொய்கை மாட்டு சந்தையில் ரூ.80 லட்சத்திற்கு வர்த்தகம்
வேலூர்: வேலூர் அருகே பொய்கை மாட்டுச்சந்தையில் இன்று ரூ.80 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை செவ்வாய்க்கிழமையான இன்று வழக்கம்போல் நடந்தது. சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் உள்ளூர் நாட்டு கறவை மாடுகள், கலப்பின கறவை மாடுகள், ஜெர்சி பசுக்கள், உழவு மாடுகள், ஜல்லிக்கட்டு காளைகள், கன்றுகள், எருமைகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதுகுறித்து கால்நடை வியாபாரிகள் கூறியதாவது: கோடைக்கு பிறகு பெய்த மழையால் தீவன தட்டுப்பாடு இல்லை. இதனால் விவசாயிகளும் மாடுகளை விற்பனை செய்ய தயங்கினார்கள். இதனால் மாடுகள் வரத்து சற்று குறைவாக காணப்பட்டது.
தற்போது மாடுகள் விற்பனை செய்தால் அதிக விலைக்கு விற்க முடியும் என்பதால் கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. மேலும் ஆடி மாதம் எப்ேபாதும் வியாபாரம் நன்றாக இருக்கும். இவைகளில் விலை ஏற்றம் இறக்கமாக உள்ளது. இன்று 1500 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. ஆடு, மாடு, கோழிகள் மற்றும் கால்நடைகளுக்கான கயிறு, கழுத்துப்பட்டி உட்பட பொருட்கள் சேர்த்து ரூ.80 லட்சத்துக்கு விற்பனை நடந்ததாக கூறினர்.