பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை எதிரொலி ஏலகிரிமலையில் சுற்றுலா பயணிகள் திரண்டனர்
ஏலகிரி : பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதால் நேற்று ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது.தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வுகள் கடந்த 25ம் தேதி முடிந்தது. இதையடுத்து விடுமுறை தொடங்கியுள்ளது. இந்த வாரம் ஆயுதபூஜை, விஜயதசமி, காந்திஜெயந்தி ஆகியவை உள்ளதால் அக்டோபர் 6ம் தேதி பள்ளிகள் திறக்கும் என தெரிவிக்கப்பட்டது.
தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலங்களில் குடும்பம் குடும்பமாக மக்கள் திரண்டு வருகின்றனர். இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரிமலையிலும் நேற்று முதல் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இங்கு வாரந்தோறும் விடுமுறை நாட்களில் பல்வேறு வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் திரள்வது வழக்கம். ஆனால் தற்போது தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் நேற்றைய தினம் அதிக எண்ணிக்கையில் மக்கள் திரண்டனர்.
இதன்காரணமாக ஏலகிரிமலையில் உள்ள 14 கொண்டை ஊசி வளைவுகள், படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, சாகச விளையாட்டுத்தலங்கள், பறவைகளின் சரணாலயங்கள், மூலிகை பண்ணைகள், மங்கலம் சுவாமிமலை ஏற்றம், தாமரைக்குளம், ஸ்ரீ கதவநாச்சியம்மன் திருக்கோயில், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் திரண்டு சுற்றிபார்த்தனர்.
குறிப்பாக படகு இல்லத்தில் நீண்டவரிசையில் காத்திருந்து அதில் பயணம் செய்து மகிழ்ந்தனர். இதேபோன்று தங்கும் விடுதிகளிலும் சுற்றுலா பயணிகள் திரண்டிருந்தனர்.
பறவைகளுக்கு உணவளித்த சுற்றுலா பயணிகள்
ஏலகிரிமலையில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு ஏராளமான பறவைகள் உள்ளது. குறிப்பாக பலவகையான புறாக்கள், கோழிகள், கிளிகள், முயல்கள் உள்ளிட்டவை உள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் கொஞ்சி மகிழ்ந்து உணவளித்தனர்.
இதுதவிர அங்கு அமைக்கப்பட்டுள்ள தொடர்வண்டியில் குடும்பத்தோடும் உற்சாகமாக பயணித்தனர். மேலும் அங்குள்ள பழக்கடைகள், தின்பண்ட கடைகள் மற்றும் உணவு விடுதிகளிலும் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.