நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் இருப்பது தமிழ்நாட்டின் முதல் விநாயகர்: 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது; வரலாற்று ஆய்வாளர் தகவல்
விழுப்புரம்: தமிழ்நாட்டின் முதல் விநாயகர் விழுப்புரம் மாவட்டம் ஆலகிராமத்தில் வீற்றிருக்கும் விநாயகர்தான் என்பதும், 1500 ஆண்டுகள் பழமையானது என்றும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் குறித்தும், தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு எப்போது தொடங்கியது என்பது குறித்தும் விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது பாதாமி. வரலாற்றில் இந்த நகரம் வாதாபி என்று குறிப்பிடப்படுகிறது. இந்நகரின் மீது பல்லவ மன்னர் மாமல்லன் எனும் சிறப்பு பெயரை கொண்ட முதலாம் நரசிம்ம வர்மன் கி.பி.642ல் படையெடுத்து சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசியை தோற்கடித்து வாதாபியைக் கைப்பற்றினார். பல்லவ மன்னனின் வாதாபி வெற்றியை தொடர்ந்து அவரது தளபதி பரஞ்சோதி என்பவரால் அங்கிருந்து கொண்டு வரப்பட்டவர் விநாயகர்.
தமிழ்நாட்டில் அப்போது இருந்து (கி.பி.7ம் நூற்றாண்டு முதல்) தான் விநாயகர் வழிபாடு தொடங்கியது. அதற்கு முன்பாக இவ்வழிபாடு தமிழ் மண்ணில் இல்லை எனும் கருத்துக்கள் நீண்ட காலமாகவே வேரூன்றி இருக்கின்றன. அதே நேரம் பிள்ளையார்பட்டியில் இருப்பவர் தான் தமிழ்நாட்டின் மூத்த விநாயகர் என்றும் பரவலாக பேசப்பட்டு வந்தது. விநாயகர் வழிபாடு தொடர்பான இந்த விவரங்கள் வரலாறாக இல்லாமல் இப்போது கதைகளாகிவிட்டன. காரணம், ஆலகிராமம் விநாயகர் ஆவார். விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு அருகே உள்ளது ஆலகிராமம்.
இங்குள்ள பழமை வாய்ந்த எமதண்டீஸ்வரர் கோயிலில் விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் வீரராகவன், மங்கையர்க்கரசி ஆகியோர் கடந்த 2015ம் ஆண்டு ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த விநாயகர் சிற்பத்தில் வட்டெழுத்து கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டது. கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் இக்கல்வெட்டில் உள்ள பிரமிறை பன்னூற சேவிக... மகன் கிழார் கோன்... கொடுவித்து எனும் வாசகங்களை வாசித்தார். இதன் காலம் கி.பி.5ம் நூற்றாண்டு என தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் உள்ள விநாயகர் சிற்பங்களில் இந்த சிற்பம் முதன்மையானது என்று தெரிவித்தார்.
இதன்மூலம் ஆலகிராமத்து விநாயகர் சிற்பம் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. விநாயகர் வாதாபியில் இருந்து கொண்டு வரப்பட்டவர் என்பது கற்பனைக்கதை என்றாகி இருக்கிறது. பல்லவர் காலத்துக்கு முன்பே விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டில் இருந்தது என்பதற்கான ஆதாரமாகவும் ஆலகிராமம் விநாயகர் சிற்பம் திகழ்கிறது. இதன்மூலம் தமிழ்நாட்டின் முதல் விநாயகர் சிற்பம் எனும் சிறப்பினையும் ஆலகிராமம் விநாயகர் பெற்றிருக்கிறார். 1500 ஆண்டுகள் ஆனபோதும் இந்த விநாயகர் சிற்பம் இன்றும் வழிபாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும் நிலையில் தமிழகத்தில் முதல் விநாயகர் எங்கிருக்கிறார் என்ற புதிய ஆன்மீக தகவல் தற்போது கிடைக்க பெற்றுள்ளது.