நாளை 2வது ஓடிஐ துவங்கவுள்ள நிலையில் அவசர கூட்டத்துக்கு பிசிசிஐ அழைப்பு: காம்பீர், அகர்கர் பங்கேற்பு
புதுடெல்லி: இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் இடையே 2வது ஒரு நாள் போட்டி நாளை நடக்கவுள்ள நிலையில், இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அவசர கூட்டம் நடத்த பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது. தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான்கள் விராட் கோஹ்லியின் அதிரடி சதம், ரோகித் சர்மாவின் அரை சதத்தால் இந்தியா அபார வெற்றி பெற்றது. இவர்கள் இருவரும், அடுத்து வரும் தொடர்களில் ஆடுவது குறித்து பல்வேறு யூக செய்திகள் உலவி வருகின்றன.
இதற்கிடையே, நாளை 2வது ஒரு நாள் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில், அவசர கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி, இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் உள்ளிட்டோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா, இணை செயலாளர் பிரப்தேஜ் சிங் பாட்டியா உள்ளிட்டோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள், அணி வீரர்களின் தேர்வு தொடர்பாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.