டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு டிஎன்பிஎஸ்சி மறுப்பு
சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு டிஎன்பிஎஸ்சி மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. டிஎன்பிஎஸ்சி எனப்படுகிற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், எந்தெந்த துறைகளில் காலி பணியிடங்கள் இருக்கின்றன; அவற்றிற்கான தகுதிகள் என்னென்ன என்பது குறித்த விவரங்களை வெளியிட்டு, அதற்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி, வி.ஏ.ஓ மற்றும் இளநிலை உதவியாளர் போன்ற காலி பணியிடங்களை நிரப்ப, கடந்த 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 4 போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டன.
3,935 பணியிடங்களுக்கு சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் சுமார் 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கான விடைக் குறிப்புகள் இன்று வெளியாகியுள்ளன. இதனிடையே சேலம் மாவட்டத்தில் இருந்து அனுப்பப்பட்ட விடைத்தாள் கட்டுகள் உரிய பாதுகாப்பில்லாமல், அட்டைப்பெட்டிகள் ஆங்காங்கே கிழிக்கப்பட்டும், முறையாக சீலிடப்படாமலும் இருக்கிற புகைப்படங்கள் வெளியாகி, சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு டிஎன்பிஎஸ்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
தேர்வுகள் முடிந்ததும் விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு பெட்டியில் வைத்து சீல் வைக்கப்படும். சாதாரண அட்டைப்பெட்டிகளில் விடைத்தாள்கள் கொண்டுவரப்படாது. விடைத்தாள்கள் சீல் செய்யப்பட்ட டிரங்க் பெட்டியில் தலைமையகத்துக்கு பத்திரமாக கொண்டுவரப்பட்டது. அட்டைப்பெட்டியில் விடைத்தாள் பிரிக்கப்பட்ட நிகழ்வு எங்கே நடந்தது என விசாரணை நடத்தப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.