தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் நேற்று (09.11.2025) இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்குத் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, அவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு வழிவகை செய்யுமாறு வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று (10.11.2025) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், 09.11.2025 அன்று இரவு. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும், அவர்களது இயந்திரப் படகினையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளதை தெரிவித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்திய மீனவர்களும் அவர்களது மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது ஆழ்ந்த கவலைக்குரியதாக உள்ளதென குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், 2024-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட பல மீனவர்கள் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தமிழ்நாட்டைச்சேர்ந்த 128 மீனவர்களும் 248 மீன்பிடிப் படகுகளும் இலங்கை காவலில் உள்ளதாகவும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் மீன்பிடித் தொழிலை முதன்மை வாழ்வாதாரமாக நம்பியுள்ள கடலோர சமூகங்களை ஆழமாகப் பாதித்துள்ளதாகவும், அவர்களின் குடும்பங்களுக்குக் கடுமையான துன்பங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நீண்டகாலப் பிரச்சனைக்குத் தீர்வு காண கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் உயிர்ப்பித்திடவும். இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நீடித்தத் தீர்வை அடைந்திட ஒருங்கிணைந்த முயற்சிகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் தனது சுடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அவர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு வழிவகை செய்யுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.