திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா: முதல் நாளான இன்று சண்முகருக்கு லட்சார்ச்சனை பூஜை கோலாகலமாக தொடங்கியது
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா 7 நாள் நடைபெற உள்ள விழாவில் முதல் நாளான இன்று சண்முகருக்கு லட்சார்ச்சனை பூஜைகளுடன் கோலாகலமாக தொடங்கியது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் இன்று கந்த சஷ்டி விழாவையொட்டி அதிகாலை சிறப்பு பூஜைகள் செய்து புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து காவடி மண்டபத்தில் சண்முகருக்கு லட்சார்ச்சனை பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது 7 நாட்கள் நடைபெற உள்ள இவ்விழாவில் தினமும் காலை முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து காவடி மண்டபத்தில் உள்ள முருகப்பெருமானுக்கு லட்சார்ச்சனை பூஜைகள் நடைபெறும்.
விழாவில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மாலை அணிவித்து பயபக்தியுடன் முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபட்டனர். 6ஆம் நாள் தமிழ்நாட்டில் அனைத்து முருகன் கோவில்களிலும் சூரசம்காரம் நடைபெறும் ஆனால் திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் டன் கணக்கில் வண்ண வண்ண மலர்களால் முருகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சனையாக நடைபெற உள்ளது. கடைசி நாளான 28ஆம் தேதி காலை 10 மணி அளவில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.