திருப்பதிக்கு இன்று முதல்வர் வருகையையொட்டி வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாயுடன் போலீசார் சோதனை
திருமலை: திருப்பதிக்கு இன்று முதல்வர் வருகை தர உள்ளநிலையில், மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மறைந்த தனது சகோதரர் ராமமூர்த்தி நாயுடு நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று திருப்பதி வருகிறார். அதற்காக அமராவதி உண்டவள்ளியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டர் மூலம் திருப்பதி வேளாண் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட்டில் வந்த இறங்கி, அங்கிருந்து சந்திரகிரி மண்டலம் நாராவாரி பள்ளியில் உள்ள தனது இல்லத்திற்கு செல்ல உள்ளார்.
பின்னர் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு உண்டவள்ளியை அடைகிறார். இந்நிலையில் முதல்வர் வந்திறங்கும் ஹெலிகாப்டர் தளம் அருகே 5 ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு மின்னஞ்சல் வந்தது. அதனடிப்படையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு, போலீசார் மோப்ப நாய்கள் கொண்டு துல்லியமாக நேற்று சோதனை மேற்கொண்டனர். அதில் எந்தவித வெடிகுண்டும் கிடைக்காத நிலையில் மின்னஞ்சல் அனுப்பியவர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.