திருப்பதி கோயிலில் நெய் கலப்பட விவகாரம் அறங்காவலர் குழு முன்னாள் தலைவரின் உதவியாளர் கைது
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதங்கள் மற்றும் பூஜைகளுக்கு பயன்படுத்துவதற்காக 6 மாதங்களுக்கு 1700 முதல் 2000 டன் நெய் தேவைப்படுகிறது. இதற்காக கொள்முதல் செய்யப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக திண்டுக்கல் ஏஆர் டெய்ரியின் நிர்வாக இயக்குநர் ராஜு ராஜசேகரன்உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவரும் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பாவுமான ஒய்.வி.சுப்பாரெட்டியின் உதவியாளராக கடந்த 2019ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை பணி புரிந்த அப்பண்ணாவுக்கும் தொடர்பு உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து சிறப்பு விசாரணை குழுவினர் (எஸ்.ஐ.டி) நேற்றுமுன்தினம் இரவு அப்பண்ணாவை கைது செய்தனர். பின்னர் அவரை நெல்லூர் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
