திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கோடைவிடுமுறை என்பதால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. நேற்று 71,510 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 43,199 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.63 கோடி காணிக்கை செலுத்தினர்.
இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிலா தோரணம் வரை வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.