திருப்பதி கோயிலுக்கு லட்டு தயாரிப்பதற்காக விநியோகிக்கப்பட்ட நெய்யில் கலப்படம் செய்த வழக்கில் ஒருவர் கைது..!
ஐதராபாத்: பிரசாதம் தயார் செய்யவும், பூஜைக்காகவும் 6 மாதங்களுக்கு 15,000 முதல் 20,000 டன் நெய் பயன்படுத்தப்படுகிறது. இந்த நெய்யை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டு ஒப்பந்தம் வழங்கப்படும். அவ்வாறு 2024-ம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் விடபட்ட டெண்டரில் திண்டுக்கலைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை பெற்றுகொண்டது. அந்த நிறுவனத்திடம் தேவையான நெய்யை சப்ளை செய்ய போதிய வசதிகள் இல்லாவிடாலும் ஒப்பந்தம் பெறபட்டு உத்தரகாண்ட் போலோ பாபா டெய்ரி நிறுவனத்திடம் நெய் பெற்று திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் சப்ளை செய்துவந்தனர்.
அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சந்திரபாபு நாய்டு முதல்வராக பதவியேற்றபிறகு செயல் அதிகாரியாக ஷாமலா ராவ் நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் சப்ளை செய்த நெய்யில் கலப்படம் இருப்பது கண்டறியபட்டு, ஆய்வகத்திற்கு அனுப்பபட்டது. இந்த ஆய்வக முடிவில் நெய்யில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து ஆந்திர மாநில அரசு சிறப்பு விசாரணை குழுவை நியமனம் செய்தது.
இதனை எதிர்த்து சிபிஐ விசாரணை கோரி மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில் உச்சநீதிமன்றம் சிபிஐ இணைஇயக்குநர் வீரேஷ் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை நியமனம் செய்தது. கடந்த ஓராண்டாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகரன், போலோ பாபா டெய்ரி நிறுவனத்தின் இயக்குநர்கள் உள்பட சுமார் 7 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த டெண்டர் எவ்வாறு வழங்கப்பட்டது, இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரணையும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இந்த விசாரணையில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவரும், முன்னால் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பாவுமான சுப்பாரெட்டியின் உதவியாளராக பணியாற்றிவந்த அப்பண்ணாவிடம் விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அப்பண்ணா தனது கைதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் அப்பண்ணாவை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான அப்பண்ணா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் நெல்லூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.