திருச்செங்கோடு, பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: சட்டப்பேரவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை
சென்னை: திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த ஜூன் 13ம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார். இதுவரை 31 நாட்கள் 69 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேசினார். இதில் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள், தொகுதி வெற்றி நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
தேர்தலுக்கு இன்னும் குறுகிய மாதமே உள்ளதால் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட வேண்டும். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றிக்காக உழைக்க வேண்டும். கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதிகளிலும் கூடுதல் வாக்குகளை பெற வேண்டும். திமுக அரசு செய்துள்ள மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை வீடு, வீடாக சென்று மக்களிடம் விளக்க வேண்டும். மக்கள் பிரச்னைகளை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க ேவண்டும் என்று அப்போது வலியுறுத்தினார். வரும் சட்டசபை தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது நமது இலக்கு. அந்த இலக்கை எட்ட அனைவரும் உறுதியோடு பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி வாழ்த்தினார்.