திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்கள் தங்குவதற்கு எந்த தடையும் காவல்துறையால் அறிவிக்கப்படவில்லை: காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்கள் தங்குவதற்கு எந்த தடையும் காவல்துறையால் அறிவிக்கப்படவில்லை எனவும் பாதுகாப்பாக தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் எஸ்பி ஆல்பர்ட் ஜான் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; "தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் இரவு பகல் பாராமல் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வடகிழக்கு பருவமழை அல்லது திடீர் கனமழையின் காரணமாக அந்த நேரத்தில் மட்டும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடற்கரையில் தங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கோயில் வளாகத்தில் பாதுகாப்பாக தங்குவதற்கு அறிவுறுத்தப்படுகிறது. எனவே தற்போது கடற்கரை பகுதியில் தங்குவதற்கு எந்த விதமான தடையும் அறிவிக்கப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.