திருச்செந்தூரில் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை
தூத்துக்குடி: திருச்செந்தூரில் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டுக்கு தெரியவந்ததை அடுத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முயற்சி செய்தனர்.
இதையடுத்து காவல் நிலையத்தில், வைத்து அந்த பெண்ணை பெற்றோர்களிடம் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில், இன்று காலை வேலைக்கு செல்வதற்காக மணிகண்டன் திருச்செந்தூருக்கு சென்றார். அப்போது தோப்பூர் அருகே வழிமறித்து மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கி வெட்டியுள்ளனர். இதனால் உயிருக்கு பயந்து அவர் அங்கு இருந்து ஓடி அருகில் உள்ள மரக்கடையில் ஒளிந்துள்ளார். அந்த கும்பல் ஓட ஓட விரட்டி சென்று மரக்கடைக்கு புகுந்து சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.
இதில் கழுத்து பகுதியில் பலத்து வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த திருச்செந்தூர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் சாலையில் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்திருக்கிறது.