தும்மனட்டியில் மானியத்தில் பசுமை குடில் அமைப்பு
ஊட்டி : ஊட்டி அருகே தும்மனட்டி கிராமத்தில் பின்னேற்பு மானியத்தில் அமைக்கப்பட்ட 2000 ச.மீ.,யில் அமைக்கப்பட்ட பசுமை குடிலை தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்தனர்.தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் ஒரு பிரதான தோட்டக்கலை மாவட்டமாகும்.
பயிர்சாகுபடியிலும், சீதோஷ்ண நிலையிலும் அண்டைய மாவட்டங்களைக் காட்டிலும் பெருமளவு வேறுபட்டது. நீலகிரி மாவட்டத்தில் நிலவக்கூடிய தட்பவெட்பநிலை பல்வேறு பயிர்கள் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது.
முறையே தேயிலை, காய்கறிகள், பழங்கள், வாசனைதிரவிய பயிர்கள், மலர்கள், மருத்துவ பயிர்கள் மற்றும் மலைத் தோட்டப்பயிர்கள் ஆகியவை படிமட்டங்கள் மற்றும் சில கிராமங்களில் குறுகிய சரிவான பரப்பில் சாகுபடி செய்யப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டிற்கு நீர்போகம், கார்போகம் மற்றும் கடை போகம் என மூன்று பருவங்களாக சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் ேமற்கொள்ளப்படுகிறது. 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி விவசாய பணிகளுக்கு பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த தேசிய தோட்டக்கலை வளர்ச்சி இயக்க திட்டம் மூலம் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பசுமை குடில் அமைக்க அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 2500 ச.மீ.,க்கு ரூ.12.50 லட்சம் பின்னேற்பு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி தும்மனட்டி கிராமத்தில் விவேகானந்தன் என்ற விவசாயி அமைத்த 2000 ச.மீ பசுமை குடிலுக்கு ரூ.10 லட்சம் மானியம் விடுவிப்பிற்காக தோட்டக்கலை துணை இயக்குநர் நவநீதா கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தோட்டக்கலை உதவி இயக்குநர் பைசல், துணை தோட்டக்கலை அலுவலர் ஜெயக்குமார் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் மணிகண்டன் உட்பட பலர் உடனிருந்தனர்.