குன்றத்தூரில் நடந்த தாய்-மகள் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு ஆயுள்: காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
காஞ்சிபுரம்: குன்றத்தூரில் நடந்த தாய்-மகள் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு 6 ஆயுள் தண்டனை வழங்கி காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அடுத்த இரண்டாம் கட்டளை பேசில் கார்டன் பகுதியில் வசிப்பவர் ராமசாமி. இவர் ஓமன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஆசிரியரான தேன்மொழி (30). இவர் தனது தாய் வசந்தா, 6 வயது சுரபி மற்றும் ஆறு மாத குழந்தை குண ஆகியோருடன் வசித்து வந்தார். இவரது வீட்டில் வேலைக்கார பெண்ணாக சத்யா (28) என்பவர் பணிபுரிந்தார். இந்தநிலையில், வீட்டில் உள்ள பணம் மற்றும் நகைகளை திருடுவதற்கு தனது கூட்டாளிகளான ஜெயக்குமார் (55) தஹ்லத்பேகம் (50) ஆகியோருடன் இணைந்து சதி திட்டம் தீட்டினார். அதன்படி, கடந்த 2016 ஏப்ரல் 19ம் தேதி தேன்மொழி வேலைக்குச் சென்றிருந்தபோது அவரது தாய் வசந்தா மற்றும் 2 குழந்தைகள் வீட்டில் இருந்த நிலையில் சத்யா கூட்டாளிகளான ஜெயக்குமார், தவுலத் பேகம் ஆகியோரை அழைத்து வந்து வசந்தாவை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் தேன்மொழியை தொடர்புகொண்டு வீட்டிற்கு வரவழைத்து, அவரையும் 16 இடங்களில் கழுத்தறுத்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். மேலும் இதைப் பார்த்த ஆறு வயது குழந்தையையும் மற்றும் ஆறு மாத குழந்தையும் கொலை செய்ய முயற்சித்தபோது இருவரும் மயக்கம் அடைந்ததை கண்டு இறந்து விட்டதாக எண்ணி வீட்டில் இருந்த 16 சவரன் நகை, விலை உயர்ந்த வாட்ச் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். ஒரு மணி நேரம் கழித்து கண்விழித்த ஆறு வயது குழந்தை சுரபி , தனது தங்கையை அழைத்துக்கொண்டு எதிர் வீட்டில் உள்ள கன்னியப்பன் என்பவர் வீட்டுக்குச் சென்று நடந்தவற்றை தெரிவித்துள்ளார். அவர் உடனடியாக குன்றத்தூர் போலீசில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து குன்றத்தூர் போலீசார் இருவரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கு காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. அரசு தரப்பு வக்கீல் சசிரேகா 39 சாட்சிகளை விசாரணை மேற்கொண்டு வழக்கை விசாரித்து முடித்தார். இந்த வழக்கில், மாவட்ட நீதிபதி தீப்தி அறிவுநிதி நேற்று தீர்ப்பு வழங்கினார். நகைக்காக கொடூரமாக கொலை செய்த சத்யா, ஜெயக்குமார், தவுலத் பேகம் ஆகிய 3 பேருக்கும் 7 பிரிவுகளின் கீழ் தலா ஆறு ஆயுள் தண்டனையும், ரூ.80,000 அபராதமும் வழங்கினார். தண்டனை முழுவதையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு நிதி உதவி வழங்கவும், குற்றவாளிகள் செலுத்தும் அபராத தொகையையும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பு அளித்தார். இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு 6 ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட இந்த சம்பவம் காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.