தூத்துக்குடி நகை உருக்கும் ஆலையில் இருந்து 300 கிராம் தங்கக்கட்டியுடன் ரயிலில் தப்பிய வாலிபர் கைது: சேலம் ஸ்டேஷனில் மடக்கி பிடித்த போலீசார்
சேலம்: தூத்துக்குடி நகை உருக்கும் ஆலையில் இருந்து, 300 கிராம் தங்கக்கட்டியை திருடிக்கொண்டு ரயிலில் தப்பி வந்த மகாராஷ்டிரா வாலிபரை, சேலம் ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நகை வியாபாரி விகாஷ் ஷிண்டே. இவர் தூத்துக்குடி டபிள்யூ.ஜி.சி.,ரோட்டில் நகை உருக்கும் ஆலையை நடத்தி வருகிறார். இங்கு பல்வேறு டிசைன்களில் நகை செய்வதற்காக பழைய நகை மற்றும் புதிய நகையை உருக்கி கட்டியாக்கி கொடுக்கின்றனர். இந்த நகை உருக்கும் ஆலையில், மகாராஷ்டிரா மாநிலம் எலவிக்கவ்மேடா பகுதியை சேர்ந்த விட்டல் சிங்கடே (28) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை, வேலைக்கு வந்த அவர், சிறிது நேரத்தில் ஆலையில் இருந்து மாயமானார். அப்போது, ஆலையில் இருந்த தங்கக்கட்டிகளையும், பணத்தையும் உரிமையாளர் விகாஷ் ஷிண்டே சரி பார்த்துள்ளார். அதில், 298.400 கிராம் எடை கொண்ட தங்கக்கட்டி மற்றும் ரூ.43 ஆயிரத்தை திருடிக்கொண்டு விட்டல் சிங்கடே தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது. உடனே தூத்துக்குடி மத்தியம் போலீஸ் ஸ்டேஷனில் விகாஷ் ஷிண்டே புகார் கொடுத்தார். போலீசார் துரித விசாரணையில் இறங்கினர். அதில், விட்டல் சிங்கடே, திருநெல்வேலி-தாதர் எக்ஸ்பிரசில் (மும்பைக்கு செல்வது தெரியவந்தது.
ரயில் சேலம் அருகே ரயில் சென்று கொண்டிருப்பதை அறிந்து, சேலம் ரயில்வே போலீசாருக்கு தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் ரயில்வே போலீசார், இரவு 10 மணிக்கு திருநெல்வேலி-தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததும், அந்த ரயிலின் மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்கு சென்று, அங்கு படுத்திருந்த விட்டல் சிங்கடேவை மடக்கி பிடித்து, கைது செய்து, 298.400 கிராம் தங்கக்கட்டி, ரூ.43,330 பணம், ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர், தூத்துக்குடி மத்தியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து வந்த போலீசாரிடம் நேற்று காலை வந்து விட்டல் சிங்கடே மற்றும் தங்கக்கட்டி, பணத்தை ஒப்படைத்தனர். விசாரணையில், விட்டல் சிங்கடே ஒரு கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி. இவர் கடந்த மாதம் 26ம் தேதி தான், விகாஷ் ஷிண்டேவின் நகை உருக்கும் ஆலையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். சொந்த மாநிலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி என்பதால், வேலைக்கு வைத்துக்கொண்டுள்ளார். சொந்த கிராமத்தில் கட்டி வரும் வீட்டுக்கு வாங்கிய கடனை அடைக்க, நகை உருக்கும் ஆலையில் இருந்து 300 கிராம் தங்கக்கட்டி, ரூ.43 ஆயிரத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.