தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடி முதலீட்டில் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் ஆலையை ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்னிலையில் கையெழுத்தானது. ரிலையன்ஸ் நிறுவனம் என்பது மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனமாகும் .
இதன் வணிகங்களில் எரிசக்தி , பெட்ரோ கெமிக்கல்ஸ் , இயற்கை எரிவாயு , சில்லறை விற்பனை , பொழுதுபோக்கு , தொலைத்தொடர்பு , வெகுஜன ஊடகங்கள் மற்றும் ஜவுளி ஆகியவை அடங்கும். இந்தியாவின் மிகப்பெரிய பொது நிறுவனமான ரிலையன்ஸ் , உலகளவில் 86வது பெரிய நிறுவனமாகும். இத்தகைய நிறுவனம் தமிழ்நாட்டில் தற்போது முதலீடு செய்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் 24.09.2025 இன்று கையெழுத்தானது.
இது குறித்து, அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில், தூத்துக்குடி அல்லிகுளம் சிப்காட்டில் 60 ஏக்கரில் உணவுப் பொருட்கள் தயாரிப்பு ஆலை அமைகிறது. உற்பத்தி மையத்தில் பிஸ்கட், மசாலாப் பொருட்கள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படும். இத்தகைய சிப்காட்டில் அமைக்கப்படும் புதிய ஆலையால் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் இவ்வாறு தெரிவித்திருந்தார்.