திருவள்ளூர் அருகே பரபரப்பு: சுங்கச்சாவடியில் 271 கிலோ போதை பொருள் பறிமுதல்: 2 பேர் கைது
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டிஎஸ்பி தமிழரசி உத்தரவின்படி, திருவள்ளூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் தலைமையில் போலீசார் பட்டரைபெரும்புதுார் சுங்கச்சாவடி பகுதியில் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினர். அப்போது திருத்தணியில் இருந்து வந்த ஒரு காரை மறித்து போலீசார் சோதனை செய்தபோது அதில் ஹான்ஸ் 10,500 பாக்கெட்டுகள், கூலிப் 224 பாக்கெட்டுகள், விமல் 3120 பாக்கெட்டுகள், வி1 3120 பாக்கெட்டுகள், ஸ்வாகத் 1400 பாக்கெட்டுகள் என மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 271 கிலோ போதை பொருட்கள் வைத்திருந்தனர்.
இதையடுத்து சென்னை குன்றத்தூரை சேர்ந்த நாராயணன் (40), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் (35) ஆகியோரை கைது செய்து விசாரித்தபோது சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை பொருட்கள் விற்பனை செய்ததாக தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்து 271 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மதுவிற்ற பெண் கைது;
திருவள்ளூர் அடுத்த மப்பேடு சத்தரை பகுதியில் நேற்று மதியம் எஸ்.ஐ. முத்து தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சத்தரை மேட்டு காலனி பகுதியில் வீட்டில் பதுக்கிவைத்து மது விற்பனை செய்த சாந்தி (50) கைது செய்து அவரது வீட்டில் இருந்து குவார்ட்டர் பாட்டில்கள், பீர்பாட்டில்கள் என மொத்தம் 49 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் சாந்தியை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.