திருப்பரங்குன்றம் மலையில் நீதிபதி ஆய்வின்போது பறந்த டிரோன் பறிமுதல் யூடியூபர் மீது வழக்கு
திருப்பரங்குன்றம்: மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நேற்று முன்தினம் மாலை திருப்பரங்குன்றம் மலை மீது சென்று சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்தார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆய்வு செய்தபோது மலையின் மேல் பகுதியில் டிரோன் கேமரா ஒன்று பறந்து படம் பிடித்துக் கொண்டிருந்தது. இதையடுத்து போலீசார், டிரோன் கேமரா குறித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த டிரோன் கேமரா, மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த யூடியூபர் மணிக்கு சொந்தமானது எனத் தெரியவந்தது. அவரை அழைத்து போலீசார் விசாரித்ததில், நீதிபதி ஆய்வின்போது டிரோன் பறக்க விட்டதில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது. யூடியூப் வீடியோவிற்காக யதார்த்தமாக எடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த திருப்பரங்குன்றம் போலீசார், டிரோன் கேமராவை பறிமுதல் செய்தனர்.