திற்பரப்பு அருவி அருகே கேரள லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
குலசேகரம்: திற்பரப்பு அருவி அருகே கேரள மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குமரி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் வாகன பார்க்கிங் பகுதியில் இருந்து படகுதுறை செல்லும் இடத்தில் தனியார் ரப்பர் தோட்டம் உள்ளது. இன்று காலை தோட்டத்தில் உள்ள ரப்பர் மரத்தில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நிற்பதை பால் வெட்டும் வேலைக்கு சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து குலசேகரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது துணியால் தூக்குப்போட்டு இறந்த நிலையில் கிடந்தவரை கீழே இறக்கி எதாவது தடயங்கள் இருக்கிறதா? என்று பார்த்தனர். அப்போது அவரது அடையாள அட்டை மற்றும் செல்போன் போன்றவற்றை பாக்கெட்டில் இருந்து எடுத்தனர்.
அதில் இருந்த முகவரியில் விசாரணை செய்தபோது அவர் கேரள மாநிலம் பாலராமபுரம் பம்பன் சாலை பகுதியை சேர்ந்த வாசு மகன் அஜூவ் (40) என்பது தெரியவந்தது. லாரி டிரைவரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு கனிம பொருட்கள் கொண்டு சென்று விற்பனை செய்து வந்துள்ளார். சமீபத்தில் 16 டயர் டாரஸ் லாரி ஒன்றை புதியதாக வாங்கியுள்ளார். இதன் மூலம் அதிகளவு கடனில் சிக்கியுள்ளார். குமரி மாவட்டத்திலும் பலரிடம் எம்.சாண்ட், ஜல்லி வாங்கியதில் பலரிடம் கடன்பட்டுள்ளார்.
கடன் நெருக்கடி அதிகரித்ததால் நிம்மதி இல்லாமல் கடந்த 3 நாட்களாக வீட்டிற்கு செல்லாமல் இருந்துள்ளார் இந்த நிலையில் திற்பரப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அஜூவின் உடலை போலீசார் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கேரள டாரஸ் லாரி டிரைவர் திற்பரப்பு அருவி அருகே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.