தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானையை கத்தியால் வெட்டிய பாகன் பணி நீக்கம்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் வளர்க்கப்படும் சுமங்கலா என்ற பெண் யானைக்கு கிருமாறன் என்பவர் பாகனாக உள்ளார். இந்த யானை இரவு நேரத்தில் காட்டுக்குள் மேய்ச்சலுக்கு சென்று அதிகாலை முகாமிற்கு வந்து ஆண் யானைகளை தாக்குவதும், முட்டி தள்ளுவதும் வாடிக்கை. சில நாட்களுக்கு முன் மேய்ச்சலுக்கு சென்ற சுமங்கலா யானை அதிகாலையில் முகாமிற்கு வந்து சங்கர் என்ற யானையை முட்டி கீழே தள்ளியது. இதனால் அந்த யானை பிளிறி சத்தம் போட்டது. சத்தம் கேட்ட சங்கர் யானையின் பாகன் விக்கி ஆத்திரமடைந்து குச்சியால் சுமங்கலா யானையை தாக்கியுள்ளார்.
மீண்டும் அது சங்கர் யானையை தாக்கியது. இதனால் கோபம் அடைந்த விக்கி கத்தியை எடுத்து யானையின் பின்னங்காலில் வெட்டினார். அதன் பிறகு சுமங்கலா யானை அந்த இடத்தை விட்டு அகன்றது. விக்கி கத்தியால் வெட்டியதில் யானைக்கு காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த சுமங்கலாவின் பாகன் கிருமாறன் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா ஆகியோர் அங்கு சென்று காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர். அது தற்போது நல்ல நிலையில் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் யானையை வெட்டிய பாகன் விக்கியை உடனடியாக பணிநீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.