தஞ்சை மாவட்ட பகுதிகளில் தங்கு தடையின்றி அதிக நெல் கொள்முதல் செய்ய வேண்டும்
*தஞ்சை எம்.பி. அதிகாரிகளுக்கு வலியுறுத்தல்
ஒரத்தநாடு : ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தஞ்சை எம்பி முரசொலி ஆய்வு செய்தார்.தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடி அறுவடை சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டேருக்கு மேலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட கூடுதலாக மகசூல் பெற்று உள்ளது.
இதற்கு காரணம் தமிழக அரசு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியோடு தங்கு தடை இன்றி விவசாய பணிகளை சிறப்போடு செய்தனர்.
இந்நிலையில், விளைவித்த நெல்மணிகளை அனைத்து பகுதிகளிலும் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஆங்காங்கே நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டது.
இதை கருத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு உடனடியாக மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள், எம்.பி, எம்எல்ஏ உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தங்குதடையின்றி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த தஞ்சை எம்.பி.முரசொலி அங்கு பணியாற்றி வரும் பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அந்த பணியாற்றும் பணியாளர்கள் ஒக்கநாடு கீழையூர் நெல் முதல் நிலையத்திற்கு நெல்லை வைப்பதற்கு கூடுதலாக கொட்டகை அமைத்து தரவும், நெல்லை மழை இன்றி பாதுகாப்பதற்கு போதுமான தார்ப்பாய்கள், மரக்கட்டைகள் போன்றவற்றை கொடுத்தால் ஒரு நாளைக்கு 1,500 மூட்டைக்கு மேல் கொள்முதல் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
பணியாளர்களின் கோ ரிக்கையை கேட்ட எம்பி உடனடியாக தனது செல்போன் மூலமாக மாவட்ட நெல் கொள்முதல் நிலையம் அதிகாரியை தொடர்பு கொண்டு நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்கள் எந்த ஒரு சலனம் இன்றி வேலை பார்க்க ஏதுவாக கொள்முதல் நிலையங்களுக்கு கூடுதலாக சாக்கு, மழையில் நனையாமல் இருப்பதற்கான தார்ப்பாய்கள், மரக்கட்டைகள் போன்றவற்றை உடனடியாக வழங்கி நெல் மூட்டைகளை பாதுகாக்கவும் அதிக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
மேலும் நெல் மூட்டைகளை தேக்கமின்றி உடனடியாக எடுத்துச் செல்ல தேவைப்படும் கொள்முதல் நிலையங்களுக்கு லாரிகளை அனுப்பி கொள்முதல் செய்யப்பட்ட அனைத்து நெல் மூட்டைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் விவசாயிகள் தங்கு தடையின்றி தாங்கள் உற்பத்தி செய்த நெல்மணிகளை அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகோள் விடுத்தார்.